04 - திருத்தில்லை
திருமுறை : 4 / (23-வது பதிகம்)
பண் : கொல்லி
திருநேரிசை
01. பத்தனாய்ப் பாடமாடேன் பரமனே பரமயோகீ
எத்தினால் பக்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே.
02. கருத்தனாய்ப் பாடமாட்டேன் காம்பன தோளி பங்கா
ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திருஉரு உடைய சோதீ
திருத்தமாம் தில்லைதன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்தவாறே.
03. கேட்டிலேன் கிளைபிரியேன் கேட்குமா கேட்டிஆகில்
நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே
மாட்டில் நீர் வாளை பாயு மல்கு சிற்றம்பலத்தே
கூட்டமாம் குவிமுலையாள் கூட நீ ஆடுமாறே.
04. சிந்தையைத் திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய
எந்தைநீ அருளிச் செய்யாய் யாது நான் செய்வது என்னே
செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அந்தியும் பகலும் ஆட அடிஇணை அலசும் கொல்லோ.
05. கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நிந்தன் பாதம்
கொண்டிருந்து ஆடிப்பாடிக் கூடுவன் குறிப்பினாலே
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடுமாறே.
06. பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி
மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச் சிற்றம்பலத்துக்
கூத்தா உன் கூத்து காண்பாண் கூட நான் வந்தவாறே.
07. பொய்யினைத் தவிர விட்டுப் புறம் அலா அடிமைசெய்ய
ஐய நீ அருளிச்செய்யாய் ஆதியே ஆதி மூர்த்தி
வையகம் தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே
பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்தவாறே.
08. மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள்மேலே
கனைப்பரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே
தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்தவாறே.
09. நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ வானவர்த் தலைவனே நீ
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
அஞ் சொலாள் காண நின்று அழக நீ ஆடுமாறே.
10. மண் உண்ட மாலவனும் மலர்மிசை மன்னினானும்
விண் உண்ட திருஉருவம் விரும்பினார் காணமாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடுமாறே.
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக